சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இன்று (13.6.2023) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி அவர்கள், நல் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி எனும் கருப்பொருளில் தேசிய அளவில் முதலிடம் பெற்றதற்காக கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், பிச்சானூர் ஊராட்சிக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் நாள் தேசிய ஊராட்சிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்றைய தினம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளைப் பெருமைப்படுத்தும் விதமாக, உள்ளூர்மயமாக்கப்பட்ட நீடித்த, நிலைத்த வளர்ச்சி இலக்குகளை மையப்படுத்தி 9 கருப்பொருட்கள் இனங்காணப்பட்டு, அவற்றில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், 2022-23ம் ஆண்டில் தேசிய அளவில் சிறப்பாக செயல்புரிந்த 27 கிராம ஊராட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், தமிழ்நாட்டிற்கு நல் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி எனும் கருப்பொருளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், பிச்சானூர் ஊராட்சிக்கு குடியரசுத் தலைவர் அவர்களால் (17.04.2023) அன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு.தாரேஸ் அஹமது, இ.ஆ.ப., பிச்சானூர் ஊராட்சி மன்றத் தலைவர் பொ.மருதாசலம், பிச்சானூர் ஊராட்சி செயலர் வ.உமாமகேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.