ரயிலுக்கு காத்திருந்தபோது பயங்கரம் நாக்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் அடித்துக் கொலை

நாக்பூர்: நாக்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் ரயிலுக்காக கொண்டிருந்த நபர்களை ஆசாமி ஒருவர் கான்கிரீட் ஸ்லீப்பர் கட்டையால் தாக்கியதில் தமிழர் ஒருவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாக்பூர் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 6வது பிளாட்பாரத்தில் ரயிலுக்காக சிலர் காத்துக் கொண்டிருந்தனர். அதிகாலை 3.30 மணியளவில் அங்கு நின்று கொண்டிருந்த ஆசாமி ஒருவர் தண்டவாளம் அருகே கிடந்த கட்டையை திடீரென எடுத்து பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த நபர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். யாரும் எதிர்பாராத விதமாக நடந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மயோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற ஆசாமியையும் ரயில்வே போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ஜெய்குமார் கேவட்(45) எனவும், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைபற்றி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் இறந்தவர்களில் ஒருவர் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணேஷ் குமார்(54) என தெரிய வந்துள்ளது. மேலும் மற்றொரு நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை