திருமலை: தமிழகத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக தற்போதைய தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்பி, விஜய் வசந்த் மீண்டும் களம் இறங்குவார் என கூறப்படுகிறது. அதேபோல் பாஜ சார்பில் அதே வகுப்பை சேர்ந்த விஜய் வசந்தின் நெருங்கிய உறவினரான தமிழிசையை பாஜ களம் இறக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அங்கு போட்டியிட்டு தோற்ற முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்து தவமாய் தவம் கிடக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐதராபாத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி : கடவுள் கருணை இருந்தால், பாஜக மேலிடம் வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக போட்டியில் இருப்பேன். நான் ஒரு சாதாரண பாஜ உறுப்பினர். எனக்கு அளிக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்து முடிப்பேன். எதிர்காலத்தில் பாஜ மேலிடம் என்னை எந்த பதவிக்கும் போட்டியிட நியமித்தாலும் அதனை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.