தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை : அண்ணாமலை புகழாரம்

சென்னை : சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழிசையை சந்தித்தார்.கடந்த சில நாட்களாக தமிழிசைக்கும் அண்ணாமலைக்கும் இடையே மோதல் இருந்துவந்த நிலையில் திடீர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தன்னை சந்திக்க இல்லத்திற்கு வந்த அண்ணாமலைக்கு ‘VOICE FOR ALL’ புத்தகத்தை தமிழிசை பரிசாக வழங்கினார். இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளத்தில், “இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும்,
தமிழக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்நது அளித்துக் கொண்டிருக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழக பாஜக மாநிலத்தலைவர் அன்புத்தம்பி திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தமிழிசை பதிவிட்டுள்ளார். அண்மையில் தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாக கூறப்பட்ட நிலையில் இருவரும் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில், பாஜகவில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் சேர்க்கப்பட்டு வருவதாக அண்ணாமலை தலைமையை விமர்சித்திருந்தார் தமிழிசை. பாஜக இணையதள செயற்பாட்டாளர்கள் தன்னை தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக தமிழிசை குற்றம்சாட்டியிருந்தார். தன்னை விமர்சிப்போர் மீது முன்னாள் தலைவர் என்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார். அமித் ஷா தலையிடும் அளவுக்கு தமிழ்நாடு பாஜகளில் உட்கட்சி மோதல் வலுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு முடியும் வரை போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை: காவல் ஆணையர் விளக்கம்

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் காளை உருவ பொம்மை கண்டெடுப்பு..!!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதி ஊர்வலம்