அங்கு நிதியை அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு இங்கு கிள்ளிக் கொடுக்கிறார்கள். அங்கு கர்ணனாகவும், இங்கு கும்பகர்ணனாகவும் இருக்கிறீர்கள். அங்கு ராக்கெட் விட்ட நாம் இங்கு ஒரு துரும்பை கூட விட முடியவில்லை. ஒரு தமிழன் பிரதமராக ஆக முடியுமா? அதற்கு நாம் தயாராக வேண்டும். நாட்டை தயார்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்: பெண்களுக்கெதிராக நடைபெறும் குற்றங்களின் ஆணி வேரைக் கண்டறிந்து களையவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிஞர்கள், சமூக சேவகர்கள், வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து, ஆய்வுகள் செய்து அறிக்கை மற்றும் பரிந்துரைகளை மாநில, மத்திய அரசுக்கு சமர்ப்பித்தல், சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா முழுவதிலும் உடனடியாக துவங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிர்வை அரசியலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழ்நாட்டு மக்களைத் தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது, ஜனநாயகத்தை ஒற்றை கட்சியின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் இந்த முயற்சிக்கு வன்மையான கண்டனம், இன்றைய கால மாற்றத்தையும், கல்வி வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு, இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆக குறைக்க மத்திய அரசு உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும், அரசின் நலத்திட்டங்கள் நலிவடைந்த மக்களை நேரடியாகச் சென்று அடையும்படி `அனைவருக்குமான அடிப்படை வருமான அட்டை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.