தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் ரவியாக செயல்படுவதை திராவிட மண் எப்போதும் ஏற்காது

சேலம்: தமிழ்நாடு ஆளுநர் ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக செயல்படுவதை திராவிட மண் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளாது என திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனை கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில அளவிலான முதல் ஆலோசனை கூட்டம், சேலம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில், நேற்று மாலை நடந்தது. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலச் செயலாளர் தயாநிதிமாறன் எம்பி தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, பொன்.கௌதமசிகாமணி எம்பி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

கலைஞரின் நூற்றாண்டு விழாவை, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், ஜூன் 1ம் தேதி தொடங்கி அடுத்தாண்டு மே மாதம் முடிய, மாநிலம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்துவது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக செயல்படுவதை திராவிட மண் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. திராவிடம் என்பது ஆதிக்கவாதிகளுக்கு எரிச்சல் தரும் சொல்லாகும். திராவிடம் என்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான சொல் அல்ல. மாநில அரசின் கொள்கைக்கு எதிராக திராவிட மாடலை விமர்சனம் செய்து, வெறுப்பின் உச்சத்தில் பேசுகிறார் ஆளுநர் ரவி.

திராவிட மாடலை எதிர்த்து விமர்சனம் செய்வதும், அரசு நிகழ்ச்சிகளில் சனாதானத்தை ஆதரித்து பேசுவதும், பொதுவெளியில் தமிழ்நாடு அரசினை தொடர்ந்து தேவையற்ற முறையில் விமர்சிப்பதும் என, ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆளுநர் ரவியை வன்மையாக கண்டிப்பது. அரசு பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம், அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் ஏழை, எளிய நிலையில் உள்ள தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை, கலைஞரின் பெயரில் சென்னை கிண்டியில் பல்நோக்கு மருத்துவமனை அமைத்தது, தமிழகத்தில் முதல்முறையாக 6 மாவட்ட விளையாட்டு அரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பாராவிளையாட்டு அரங்கங்கள் அமைத்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிலைக்கு, அமைச்சர் கே.என்.நேரு, தயாநிதிமாறன் எம்பி மாலை அணிவித்தனர்.

கட்சிக்கு அப்பாற்பட்டவர்களை இணைத்து வலு சேர்க்க வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு
கூட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச்செயலாளர் தயாநிதிமாறன் எம்பி பேசுகையில், ‘‘கடந்த 6 மாதத்திற்கு முன்பு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி தொடங்கப்பட்டது. தற்போது அகில இந்திய அளவில் பெண்கள் கூடைப்பந்து போட்டியை, சேலத்தில் நடத்தியுள்ளோம். கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், சிறப்புகளையும் நாம் மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும். கட்சிக்கு அப்பாற்பட்டவர்களையும், விளையாட்டின் மூலம் இணைத்து, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, திருச்சியில் விரைவில் மிகப்பெரிய அளவில் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியில் இல்லாதவர்களை எல்லாம், விளையாட்டு மூலமாக திமுகவில் சேர்க்கும் போது நாம் மகத்தான வெற்றி பெற வாய்ப்புள்ளது,’’ என்றார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்