சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு பதிவது தொடர்பான கோப்பை மீண்டும் ஆளுநருக்கே தமிழக அரசு அனுப்பி வைத்தது. தமிழக அரசு, நீண்ட நாட்கள் சிறையில் உள்ள 71 கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு கோப்பு அனுப்பி வைத்தது. இந்த விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரிய கோப்புக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. கோப்புகள் பரிசீலனையில் இருப்பதாக கூறிய ஆளுநர், தற்போது திருப்பி அனுப்பியுள்ளார்.
வழக்கு பதிவு செய்ய ஆவணங்கள் குறைவாக இருப்பதாகவும், விசாரணை அறிக்கை தனித்தனி தாள்களாக இருப்பதாகவும் கூறி திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்வது தொடர்பான கோப்பு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணை அறிக்கை தனித்தனி தாள்களாக உள்ளது எனக்கூறி கோப்புகளை திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் தமிழக அரசு சார்பில் இந்த கோப்பு ஆளுநருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.