Monday, September 23, 2024
Home » தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த 1.50 லட்சம் மின் மீட்டர்கள் விரைவில் மாற்றம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த 1.50 லட்சம் மின் மீட்டர்கள் விரைவில் மாற்றம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

by Ranjith

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்துள்ள 1.5 லட்சம் மின் மீட்டர்கள் விரைவில் மாற்றப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மின் மீட்டர்கள் ஒரு சில நேரங்களில் மின் கம்பிகளில் ஏற்படும் கூடுதல் பளு உள்ளிட்ட காரணங்களால் பழுதடைகிறது. மீட்டர்கள் பழுதடைந்தால் சரியாக மின் பயன்பாட்டை கணக்கிட முடியாது, இவ்வாறு பழுதடைந்த மின் மீட்டர்கள், தமிழ்நாடு முழுவதும் 12 விநியோக மண்டலங்களில் 1.55 லட்சத்திற்கும் அதிகமான மீட்டர்கள் விரைவில் மாற்றப்பட உள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 12 விநியோக மண்டலங்களில், சென்னை வடக்கு மற்றும் காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய விநியோக வட்டங்களில் அதிகபட்சமாக 47,873 குறைபாடுள்ள மீட்டர்கள் மாற்றப்படவுள்ளது. பழுதான மீட்டர்களை மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டால், சராசரி நுகர்வு அடிப்படையில் அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரும்.

இதன்காரணமாக பழுதடைந்த மின் மீட்டர்களை விரைவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்திறன் விநியோகத் தரநிலைகள் விதிமுறைகளின்படி, நுகர்வோரிடமிருந்து புகார் பெற்றால், மீட்டர் சரியாக இல்லை, எரிந்ததாகக் கண்டறிந்தால் மின் வாரியம் 30 நாட்களுக்குள் மீட்டரை மாற்ற வேண்டும். பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டால் நுகர்வோருக்கு மின் வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஒரு சில இடங்களில் மீட்டர்கள் கையிருப்பு இல்லாததால் பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. புதிய இணைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாலும் தாமதம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சமாளிக்க நுகர்வோர்கள் தங்கள் புதிய இணைப்புகளுக்கு நேரடியாக மீட்டர்களை தனியாரிடம் இருந்து வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் மீட்டர்களை விற்கும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதால் மின் மீட்டர்களை கட்டம் கட்டமாக கொள்முதல் செய்து வருகிறோம், இதனால் சில இடங்களில் மீட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Comment

13 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi