திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி பொதுத் தேர்வு எழுதும் 10 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலை 7.30 முதல் 9.30 வரை சிறப்பு வகுப்பு மற்றும் சிறப்புத் தேர்வு கடந்த மார்ச் 1 ம் தேதி தொடங்கப்பட்டது. காலையில் தினந்தோறும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஏற்பாட்டில் சமூக ஆர்வலர்கள் துணையுடன் மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கபட்டது.
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு அரசு பாடநூல் கழக செயலர் மற்றும் உறுப்பினர் முனைவர் ச.கண்ணப்பன் திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை பார்வையிட்டு தேர்வு எப்படி எழுத வேண்டும் பிற்காலத்தில் என்னவாக ஆகவேண்டும் என்பதை உணர்ந்து எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது முதன்மைக் கல்வி அலுவலர் த.ராமன், தலைமையாசிரியர் ராஜம்மா, சா.அருணன், பள்ளிமேலாண்மைக் குழு தலைவி திலகம் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.