தமிழகத்தில் விக்கிரவாண்டி தவிர மற்ற பகுதிகளில் சொத்துக்களுக்கான புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று முதல் அமலுக்கு வந்தது!!

சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி தவிர மற்ற பகுதிகளில் சொத்துக்களுக்கான புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முத்திரை (மதிப்பீடு, வெளியீடு மற்றும் திருத்தம் செய்வதற்கான மதிப்பீட்டுக் குழு அமைத்தல்) விதிகள், 2010, விதி 4ன்படி ஒவ்வொரு வருடமும் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட வேண்டும். வழிகாட்டி மதிப்பினை சீரமைக்கவும், வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளை களையவும், புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலுக்கான நெறிமுறைகளை பதிவுத்துறைத்தலைவர் தலைமையிலான மதிப்பீட்டு குழு கடந்த 26.04.2024 அன்று கூடி வகுத்தளித்தது.

இதனை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான துணைக்குழுக்களால் மதிப்பு நிர்ணயம் செய்யும் நடவடிக்கை துவங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான துணைக்குழுக்கள் மே மாதம் முதல் வாரத்தில் கூடி மைய மதிப்பீட்டு குழுவின் அறிவுறுத்தல்களின்படி வரைவு சந்தை வழிகாட்டி தயாரிக்க அந்தந்த மாவட்டத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும், பொதுமக்களின் கருத்துக்களை கோருவதற்கான நடைமுறைகளையும் வகுத்தளித்தனர். இப்பணிகள் துணைக்குழுக்களால் தொடர்ந்து சீராய்வு செய்யப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து அறியப்பட்ட சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு மற்றும் விற்பனை புள்ளி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு துணைக்குழுக்களால் வரைவு வழிகாட்டிக்கு ஒப்புதல் அளித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைவு வழிகாட்டி பதிவேடுகள் பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பதிவுத்துறை இணையதளத்திலும், சார்பதிவாளர், வட்டாட்சியர் போன்ற முக்கிய அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டன.

அவ்விவரம் உள்ளூர் செய்தி தாள்களில் மாவட்ட ஆட்சியர்களால் செய்திகள் வெளியிடப்பட்டன. மேலும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணைகளை தெரிவிப்பதற்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டன. மாவட்ட துணைக்குழு மூன்றாவது முறையாக கூடி வரைவு சந்தை மதிப்பு வழிகாட்டியின் மீது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபணை மற்றும் கருத்துரைகளை பரிசீலினை செய்தது. முரண்பாடுகள் உள்ள நிலையில் அதனை களைந்து புதிய சந்தை மதிப்பு வழிகாட்டியினை முழுமையாக அங்கீகரித்து மாவட்ட துணைக்குழுக்கள் தீர்மானங்கள் நிறைவேற்றி மைய மதிப்பீட்டு குழுவிற்கு அனுப்பி வைத்தன.

பதிவுத்துறைத்தலைவர் தலைமையிலான மைய மதிப்பீட்டுக்குழு 29.06.2024 அன்று மாலை 4 மணியளவில் கூடி, மாவட்ட துணைக்குழுக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, முரண்பாடுகள் களையப்பட்ட புதிய சந்தை மதிப்பு வழிகாட்டியினை 01.07.2024 முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி புதிய சந்தை மதிப்பு வழிகாட்டியானது 01.07.2024 முதல் (விழுப்புரம் வருவாய் மாவட்டம் நீங்கலாக) தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

Related posts

ஜம்மு அருகே மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: ஓடும் பேருந்தில் இருந்து குதித்ததால் 10 பயணிகள் காயம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை பிரதமருடன் சந்திப்பு..!!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!!