மதுரை: தமிழ்நாடு மீனவர்களும் இந்திய குடிமக்களே, அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இலங்கை சிறையில் இருக்கும் 26 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கில் ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். மீனவர்களை விடுவித்து தமிழ்நாடு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது என கூறி வழக்கை முடித்துவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.