தமிழ் மின் நூலகம் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை

சென்னை: தமிழ் மின் நூலகம்10 கோடிப் பார்வைகளைக் கடந்து அருஞ்சாதனை புரிந்துள்ளது என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தை 17.02.2001 அன்று தொடங்கிவைத்தார். உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் இணையம் வழியே தமிழைக் கொண்டுசேர்ப்பது இந்நிறுவனத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும்.

தமிழ்ப் பண்பாடு, பாரம்பரியம், மரபு, நாகரிகம், கலை, இலக்கணம், இலக்கியம் முதலியவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பக் கணித் தமிழை வளர்த்தெடுக்கவுமான பல்வேறு அரும்பணிகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஆற்றிவருகிறது. இந்நிறுவனத்தின் ஒரு பகுதியாக, அறிவைப் பொதுமைசெய்யும் நோக்கத்தில் 2002இல் நூல்களை மின்னுருவாக்கும் முயற்சியில் இறங்கியது தமிழ் இணையக் கல்விக்கழகம். முதலில் நூற்றுக்கணக்கான அரிய தமிழ் நூல்கள் தட்டச்சு வடிவிலும் பிடிஎஃப் வடிவிலும் பதிவேற்றப்பட்டன.

பின்னர். நூல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மின்னுருவாக்கத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, கன்னிமாரா நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நுலகம், அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், உ.வே.சா. நூலகம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம், அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, அரசு திரைப்படக் கல்லூரி, இந்திய மருத்துவ இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் உள்ள அரிய நூல்களின் லட்சக்கணக்கான பக்கங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டன

இந்த பணிகளுக்கிடையே மின் நூலக இணையதளம் (www.tamildigitallibrary.in) அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு. 2017 அக்டோபர் 11 அன்று தமிழ் மின்னூலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டது. தமிழ் மின்னூலகத் தளத்தில் இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் அரிய நூல்கள், பருவ இதழ்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவை பதிவேற்றப்பட்டுள்ளன.

இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள். பருவ வெளியீடுகள், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. சீகன் பால்கு 1716இல் லத்தீன் மொழியில் அச்சிட்ட ‘Grammatica Damulica’ என்னும் தமிழ் இலக்கண நூல், தஞ்சை சரபோஜி மன்னர் தொகுப்புகள், உ.வே.சா.வின் அரிய பதிப்புகள், தென்னிந்தியாவின் முதல் செய்தித்தாளான மெட்ராஸ் கூரியர் இதழ்கள், சித்த மருத்துவச் சுவடிகள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வெளியீடுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மேலும், சங்க இலக்கியங்கள், இலக்கண நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள். சிற்றிலக்கியங்கள், நீதி நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறார் இலக்கியங்கள், மருத்துவ நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், கலைச்சொல்லகராதிகள்,ஓலைச்சுவடிகள் என மிகப் பெரும் அறிவுச் சுரங்கமாக விளங்குகிறது இந்நூலகம். இராபர்டு காலிடுவேல் எழுதிய ‘A comparative grammar of the Dravidian or South Indian family of languages’, ‘A History of Tinnevelly’ ‘குடிஅரசு’, அறிஞர் அண்ணாவின் படைப்புகள், ‘திராவிடநாடு’, ‘நம் நாடு’, ‘தென்னகம்’, ‘போர்வாள்’, ‘மன்றம்’ என்பன போன்ற திராவிட இயக்கத்தின் முன்னணி இதழ்களும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் 150ஆம் பிறந்தநாள் நிகழ்வைக் கொண்டாடும் வகையில் அவர் தொடர்பான 127 நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், ஒளிப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய www.tamildigitallibrary.in/voc என்ற வ.உ.சி. சிறப்பு இணையப் பக்கம் 18.11.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் ‘கலைஞர்100’ என்னும் தனித்த இணையப் பக்கம் உருவாக்கப்பட்டுவருகிறது. இப்பக்கத்தில் கலைஞர் தொடர்பான நூல்கள், இதழ்கள், உரைகள், ஒலி-ஒளிப் பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் உரிய தேடல் வசதியுடன் வெளியிடப்படவுள்ளன.

தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள், கலைத் துறையினர், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்குமான அரிய புதையலாகத் தமிழ் மின் நூலகம் திகழ்கிறது. இம்மின் நூலகம் 2021 மே மாதம் 1.5 கோடிப் பார்வையைக் கடந்தது; 2024 ஜனவரியில் 6.5 கோடிப் பார்வைகளைப் பெற்றிருந்தது. குறுகிய காலத்தில் தமிழ் மின் நூலகம் 10 கோடிப் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது

Related posts

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு