தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்; நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்: உதவியாளர் மணிகண்டன், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கேசவ விநாயகம் 31ம் ேததி ஆஜராக சம்மன்

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக, நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக அவருக்கு சம்மன் அனுப்புகின்றனர். அதைதொடர்ந்து இறுதிகட்ட விசாரணையாக நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கேசவ விநாயகம் வரும் 31ம் ேததி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்கு மூலம் அளித்தனர். அதைதொடர்ந்து, இந்த வழக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் இதுவரை நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் பாஜக தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் மகன்கள் பாலாஜி, கிஷோர் மற்றும் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இதற்கிடையே பல முறை சம்மன் அனுப்பியும் பாஜக தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தன், ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கேசவ விநாயகம், முரளி ஆகியோர் நேரில் ஆஜராகாமல் பல்வேறு காரணங்களை காட்டி தப்பி வருகின்றனர். மேலும், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கேசவ விநாயகம் ரூ.4 கோடி வழக்கில் தன்னிடம் விசாரணை நடத்த கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறி உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கேசவ விநாயகம், பாஜக பிரமுகர் முரளி, நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நேர்முக உதவியாளர் மணிகண்டன், பாஜக மாநில தொழிற்துறை தலைவர் கோவர்த்தன் ஆகியோர் வரும் 31ம் தேதி எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று நேற்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரூ.4 கோடி வழக்கு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அதேநேரம் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் 2 மணி நேரம் நடத்திய விசாரணையில் பணம் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வாக்கு மூலமாக பெற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கில் சிபிசிஐடி நடத்திய விசாரணையில் ரூ.4 கோடி பணம் நெல்லை பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக கொண்டு சென்றது உறுதியாகி உள்ளது. அதற்காக பணத்தை பல இடங்களில் இருந்து வசூல் செய்து மொத்தமாக நயினார் நாகேந்திரனுக்கு ெசாந்தமான கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் இருந்து நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு சென்றது சிசிடிவி மற்றும் விசாரணைகள் மூலம் உறுதியாகி உள்ளது.

இதையடுத்து ரூ.4 கோடி தொடர்பாக பாஜக பிரமுகரும் நெல்லை பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான அனைத்து ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீசார் கடந்த ஒரு மாதமாக தனது விசாரணையின் மூலம் சேகரித்து வைத்துள்ளனர். எனவே வரும் 31ம் ேததிக்கு பிறகு நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரத்தில் இருந்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விசாரணையில் ரூ.4 கோடி பணம் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்றது உறுதியானால் அவரை கைது செய்யவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் கைது படலம் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாஜ வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Related posts

லஞ்ச வழக்கில் கைதான துணை வட்டாட்சியர் தப்பியோட்டம்..!!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!

சிவகாசி அருகே பீகாரைச் சேர்ந்த தொழிலாளி கொலை வழக்கு: 2 பேர் கைது