இதேபோல நேற்று புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (30) மற்றும் மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த ரெவெட்லின் சானு (30) ஆகியோரின் செல்போன்களும் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறும்போது மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் மற்றும் போலீசார் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த மூன்று மர்ம நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் பதில் அளித்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை சோதனை செய்து பார்த்தபோது அவர்களிடம் செல்போன்கள் இருந்தன.
தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கணேஷ் (51), தாஸ் கிருஷ்ணா (33), அகயா (21) என்பதும், ஒடிசாவில் இருந்து ஒரு கும்பலாக வந்து முடிச்சூர், நேதாஜி நகர் பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக வீடு எடுத்து தங்கி தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயற்சிக்கும் பயணிகளிடம் கூட்ட நெரிசலை உருவாக்கி அவர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்களை பறித்தது விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை செய்து பார்த்தபோது அங்கு குப்பை தொட்டியில் 15 செல்போன்கள் உள்பட மொத்தம் 17 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.