Monday, July 1, 2024
Home » தாம்பரம் அருகே பரபரப்பு சம்பவம்: நடிகர் டி.எஸ்.பாலையா பேரனின் வீட்டு நீச்சல் குளத்தில் முதலை

தாம்பரம் அருகே பரபரப்பு சம்பவம்: நடிகர் டி.எஸ்.பாலையா பேரனின் வீட்டு நீச்சல் குளத்தில் முதலை

by Suresh

சென்னை: தாம்பரம் அருகே மறைந்த நடிகர் டி.எஸ்.பாலையா பேரனின் வீட்டின் நீச்சல் குளத்தில் முதலை குட்டி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் பகுதியில் மறைந்த நடிகர் டி.எஸ்.பாலையா கார்டன் உள்ளது. இந்த கார்டன் அருகே செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ ஓபிசி அணி மாவட்ட தலைவர் பாலாஜி தங்கவேல் (48) என்பவரது வீடு உள்ளது. மறைந்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் பேரனான இவர் மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலாஜி தங்கவேல், நேற்று காலை தனது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தை சுத்தம் செய்ய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது நீச்சல் குளத்துக்குள் ஒன்றரை அடி நீளமுள்ள முதலைகுட்டி ஒன்று கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பாலாஜி தங்கவேல், முதலை பண்ணையில் முதலை பராமரிப்பு பணி பயிற்சி செய்தவர் என்பதால், முதலை குட்டியை பத்திரமாக பிடித்து, ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் போட்டு வைத்துவிட்டு, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பூங்கா ஊழியர்களிடம், முதலை குட்டியை ஒப்படைத்தார். அவர்கள், முதலைக்குட்டியை மீட்டு பூங்காவிற்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து பாலாஜி தங்கவேல் கூறுகையில், “வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து பறவைகள் முதலை குட்டிகளை எடுத்துவந்து பூங்காவை சுற்றியுள்ள ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் போட்டுவிட்டு செல்வதால், இப்பகுதியில் உள்ள ஏரிகள், நீர்நிலைகளில் முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனது வீட்டை சுற்றிலும் 10 அடிக்கு காம்பவுண்ட் சுவர் இருப்பதால், வெளியில் இருந்து முதலை குட்டி உள்ளே வருவதற்கு வாய்ப்பு இல்லை. வண்டலூர் உயிரியல் பூங்கா அல்லது நீர்நிலைகளில் இருக்கும் முதலை குட்டியை, பறவைகள் எடுத்துவந்து நீச்சல் குளத்தில் போட்டிருக்கலாம். நீச்சல் குளத்தை சுத்தம் செய்யும்போது முதலை குட்டி கிடந்ததால் பிடித்துவிட்டோம். கவனிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருக்கும் முதலைகளை முழுமையாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘வண்டலூர் உயிரியல் பூங்காவின் அருகில், சதானந்தபுரம், நெடுங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இந்த பூங்காவில் இருந்து பறவைகள், பல வருடங்களுக்கு முன்பு முதலை குட்டிகளை எடுத்துவந்து இப்பகுதிகளில் உள்ள ஏரிகளில் போட்டுவிட்டது. தற்போது அந்த முதலை குட்டிகள் பெரிதாகி ஏரியிலேயே வாழ்ந்து வருகின்றது. சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஏரிகளில் ஏராளமான முதலைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் சுமார் 7 முதல் 9 அடிக்கு மேல் இருக்கும். இவை குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுப்பதுடன், வீடுகளில் உள்ள கால்நடைகளை குறிவைத்து தாக்குகின்றன. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீடுகளில் இருந்து வெளியே வர அச்சப்படுவதுடன் உயிர் பயத்தில் உள்ளனர்.

இதனை பிடிப்பதற்கு வனத்துறையினரிடம் புகார் அளித்தால், ஏரியில் தண்ணீர் அதிகம் உள்ளது. எனவே ஏரியில் தண்ணீர் வற்றிய பிறகு முதலைகளை பிடித்து செல்கிறோம் என ஒவ்வொரு முறையும் கூறுகிறார்கள். ஆனால் ஏரியில் தண்ணீர் வற்றியும் முதலைகளை பிடிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஏரியில் 30க்கும் மேற்பட்ட முதலைகள் இருந்த நிலையில், தற்போது ஏராளமான முதலை குட்டிகள் பெருகி விட்டது. தற்போது மழைக்காலம் என்பதால் ஏரியில் தண்ணீர் அளவு அதிகரிக்கும் நிலையில், ஏரியிலிருந்து எளிதாக முதலைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

You may also like

Leave a Comment

eighteen + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi