கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தாமரைக்குளம் கண்மாய் நீர் நிலைகள் முழுவதிலும் புதுவகை நீர் நிலை தாவரம் வளரத் தொடங்கிய நிலையில், கடந்து எட்டு மாதங்களாக இந்த தாவரம் பரவி, கண்மாய் நீர் முழுவதும் வளர்ந்துள்ளது. இதனால் கண்மாய் நீர் இல்லாதது போல் காட்சியளிப்பதோடு, கண்மாய் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாதயும் நிலை ஏற்பட்டு மீன் வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தும் வருகின்றனர். இதனிடையே பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கண்மாயில் இந்த புதிய வகை தாவரம் பரவி விவசாயம் பாதித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கண்மாயில் முழுமையாக பரவியிருந்த புதிய வகை தாவரத்தை அகற்றி தூர்வாரி நடவடிக்கை மேற்கொண்டனர். அதே போன்று தாமரைக்குளம் கண்மாயிலும் பரவியுள்ள புதிய வகை தாவரத்தை அகற்றி விவசாயிகளுக்கும் மீன் வளர்ப்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாசன விவசாயிகளும் மீன் வளர்ப்பாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.