கொழும்பு: வளரும் அணிகளுக்கான ஏசிசி ஆண்கள் எமர்ஜிங் கோப்பை ஒருநாள் தொடரில், பாகிஸ்தான் ஏ அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பைனலில் இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்துவீசியது. பாகிஸ்தான் ஏ அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்தது. அந்த அணியின் தய்யப் தாஹிர் 108 ரன் (71 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். சைம் அயூப் 59, சாகிப்ஸதா பர்கான் 65, உமர் யூசுப் 35, முபாசிர் கான் 35 ரன் எடுத்தனர். இந்தியா ஏ பந்துவீச்சில் பராக், ஹங்கர்கேகர் தலா 2, ராணா, சுதர், நிஷாந்த் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 50 ஓவரில் 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணி, 40 ஓவரில் 224 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அபிஷேக் ஷர்மா 61, கேப்டன் யஷ் துல் 39, சாய் சுதர்சன் 29 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பாகிஸ்தான் ஏ பந்துவீச்சில் சுபியான் முகீம் 3, மெஹ்ரான் மும்தாஸ், முகமது வாசிம், அர்ஷத் இக்பால் தலா 2, முபாசிர் கான் 1 விக்கெட் கைப்பற்றினர். பாகிஸ்தான் ஏ அணி 128 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2வது முறையாக ஏசிசி எமர்ஜிங் கோப்பையை முத்தமிட்டது. அதிரடியாக விளையாடி சதம் விளாசிய தாஹிர் பைனலின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.