Friday, June 28, 2024
Home » டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியா அவுட்…அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியா அவுட்…அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை!

by Francis

டி20 உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 43 ரன்கள் அடித்தார். வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான தன்சித் ஹசன் மற்றும் ஷகிப் டக் அவுட்டிலும், கேப்டன் ஷண்டோ 5 ரன்களிலும், சவுமியா சர்கார் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். இதனிடையே 2 முறை மழை குறுக்கிட்ட காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் வங்காளதேசம் 19 ஓவர்களில் 114 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் நிலைத்து விளையாடி அணியை இலக்கை நோக்கி நெருங்க வைத்தார். அரை சதம் அடித்து அசத்திய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து போராடியும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. முடிவில் 17.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேசம் அணி 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. சிறப்பாக பந்து வீசி அசத்திய ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரஷீத் கான் மற்றும் நவீன் உல் ஹக் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர்.

சூப்பர் 8 சுற்றில் இந்தியா 6 புள்ளிகள், ஆப்கான் 4 புள்ளிகள், ஆஸ்திரேலியா 2 புள்ளிகள், வங்கதேசம் புள்ளிகள் இல்லை. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது ஆஸ்திரேலியா அணி. ஜூன் 26ம் தேதி நடைபெறவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி. ஜூன் 27ம் தேதி இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

20 − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi