Saturday, June 29, 2024
Home » முதல் டி.20 போட்டியில் இந்தியா தோல்வி; அடுத்த போட்டியில் வலுவாக மீண்டு வருவோம்: கேப்டன் ஹர்மன்பிரீத் பேட்டி

முதல் டி.20 போட்டியில் இந்தியா தோல்வி; அடுத்த போட்டியில் வலுவாக மீண்டு வருவோம்: கேப்டன் ஹர்மன்பிரீத் பேட்டி

by Suresh

மும்பை:இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. டேனியல் வியாட் 75 ரன்களும், நாட் ஸ்கிவர் பிரண்ட் 77 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 21 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரிச்சா கோஷ் 21 ரன்னில் வெளியேற கடைசி வரை ஒரே நம்பிக்கையாக இருந்த ஷஃபாலி வர்மா 42 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து வந்த கனிகா அகுஜா 15 ரன்களில் வெளியேற, பூஜா வஸ்ட்ரேகர் 11 ரன்னும், தீப்தி சர்மா 3 ரன்னும் எடுக்கவே இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். நாட் ஸ்கிவர் பிரண்ட், ஃப்ரேயா கெம்ப், சாரா கிளான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதில் நாட் ஸ்கிவர் பிரண்ட் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2 அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி வரும் 9ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கிறது.

தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கூறியதாவது: ”நாங்கள் எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. டி20 உலகக் கோப்பைக்குச் செல்வதற்கு முன் இளம்பந்துவீச்சாளர்கள் விரைவாகக் கற்றுக் கொள்வார்கள். இது கடினமான ஆட்டம் என்று எனக்குத் தெரியும். இங்கிலாந்து வீராங்கனைகள் மிகச் சிறந்த பேட்டர்கள், அவர்கள் பல ஆண்டுகளாக நன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள். நாங்கள் பந்துவீச்சு சிறிய மாற்றங்களுடன் வலுவாக மீண்டு வருவோம், என்றார். 2வது டி.20 போட்டி நாளை மறுநாள் (9ம்தேதி) இதே மைதானத்தில் நடக்கிறது.

You may also like

Leave a Comment

five + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi