பெரம்பூர்: வியாசர்பாடி காந்திபுரத்தை சேர்ந்தவர் ஜீவா (45), பிளம்பர். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரை சேர்ந்த சரிதா (37) என்பவருடன் திருமணமானது. கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சரிதா வேலை செய்து வந்தார். தம்பதிக்கு குழந்தை இல்லை. ஜீவா, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி, அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தம்பதி உடலுறவில் ஈடுபட்ட பின்பு இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜீவா, இரும்பு கம்பியால் சரிதாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சரிதா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உடனே ஜீவா, கட்டிலுக்கு அடியில் இருந்த பாயை எடுத்து சரிதாவின் உடலை அதில் வைத்து சுருட்டி, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டார். நேற்று காலை எழுந்து ஜீவா வேலைக்குச் செல்லாமல் அதே பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது சரிதாவுடன் வேலை செய்யும் அவரது உறவுக்கார பெண் நந்தினி, ஜீவாவுக்கு போன் செய்து, அக்கா ஏன் இன்னும் வேலைக்கு வரவில்லை, என கேட்டுள்ளார்.
அவர் காலையிலேயே வேலைக்குச் சென்று விட்டார் என ஜீவா தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த நந்தினி, ஜீவாவின் வீட்டிற்கு கிளம்பி வந்துள்ளார். அவருடன் மற்றொருவரும் துணைக்கு வந்துள்ளார். வீட்டினுள் சென்றபோது, அங்கு யாரும் இல்லை. ஆனால், கட்டிலுக்கு அடியில் இருந்து ரத்தம் வழிந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நந்தினி, உடனடியாக வெளியே ஓடிவந்து கூச்சலிட்டவாறே அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று, கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது, சரிதாவின் உடல் இருந்துள்ளது. இதையடுத்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடனடியாக ஜீவாவை பிடித்து விசாரித்தனர். அதில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், ஜீவாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.