Sunday, June 30, 2024
Home » சென்னையில் குடிநீர் விநியோக அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த நாளை முதல் கணக்கெடுப்பு பணி: குடிநீர் வாரியம் தகவல்

சென்னையில் குடிநீர் விநியோக அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த நாளை முதல் கணக்கெடுப்பு பணி: குடிநீர் வாரியம் தகவல்

by Ranjith

சென்னை: சென்னைக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத்தின் அளவு மற்றும் தரத்தினை மேம்படுத்துவதற்காக, கணக்கெடுப்பு பணிகள் நாளை முதல் தொடக்கப்பட உள்ளதாக குடிநீர் வாரியம் தரப்பில் தெரிவித்துள்ளது.  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பைப்லைன் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக, மேற்பரப்பு நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் ஆகியவை மூலம் குடிநீர் பெறப்படுகிறது. குறிப்பாக புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், போரூர், கண்ணன் கோட்டை – தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட ஏரிளில் இருந்தும், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும் சென்னைக்கு குடிநீர் பெறப்படுகிறது. இத்துடன், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் பெறுவதற்கான ஒப்பந்தமும் நடைமுறையில் உள்ளது.

ஆனால், பருவமழையை பொறுத்து உரிய காலத்தில் இந்த தண்ணீர் பெறுவதில் சிக்கல் உள்ளது. இவற்றை தவிர வடசென்னைக்கு வடக்கில் மீஞ்சூரிலும், தென்சென்னைக்கு தெற்கில் நெம்மேலியிலும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலமும், சென்னை மக்களுக்கு குடிநீர் பெறப்படுகிறது. மேலும், கூடுதலாக நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்டதும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்டதுமாக 2 புதிய கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல், தாமரைப்பாக்கம், பூண்டி, கன்னிகைப்பேர், பஞ்செட்டி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாரியத்தின் ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் சென்னை மாநகராட்சி பகுதியுடன் புதிதாக இணைக்கப்பட்ட சில இடங்களில் உள்ள கிணறுகளிலிருந்தும் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, 6 ஏரிகள் மற்றும் 3 கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் தினசரி 1,072 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் விநியோக அளவு மற்றும் தரத்தினை மேம்படுத்திட சென்னையில் நாளை முதல் 60 நாட்களுக்கு அடிப்படை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் விநியோக அளவு மற்றும் தரத்தினை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு நிதித்துறை மூலமாக சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை முதல் 60 நாட்களுக்கு அடிப்படை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில், சென்னை குடிநீர் வாரியத்தின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துதல், சேவை எல்லையை விரிவாக்குதல், வீட்டு இணைப்புகளை அதிகப்படுத்துதல், தினசரி குடிநீர் வழங்கல் சேவையை மேம்படுத்துதல், நிர்ணியக்கப்பட்ட தரத்தின் அளவுகளின் அடிப்படையில் குடிநீர் விநியோகம் விநியோகிக்கப்படுகிறதா போன்றவைகள் தொடர்பாக சென்னை பகுதிகளுக்குட்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள்தோறும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, சென்னை குடிநீர் வாரியத்தால் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, அடையாள அட்டையுடன் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளும் களப்பணியாளர்கள், பொதுமக்களிடம் குடிநீரின் தரம் மற்றும் குடிநீர் வழங்கப்படும் அளவு மற்றும் அதன் கால அளவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்வார்கள். இதற்கு தேவையான விவரங்களை பொது மக்கள் களப்பணியாளர்களிடம் தெரிவித்து குடிநீர் வாரியத்தின் செயல்பாட்டினை மேம்படுத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 600 இடங்களில் மாதிரி சேகரிப்பு
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம், புழல், சூரப்பட்டு, வீராணம், செம்பரம்பாக்கம் ஆகிய 5 நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 300 முதல் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து குடிநீரின் தரம் ஆய்வு செய்தும் வருகிறது. ஏராளமான இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து, குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* நவீன பரிசோதனைக் கூடம்
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் தரத்தை அறியும் நவீன பரிசோதனைக் கூடத்தில், தரமான குடிநீர் வழங்குதல், பாதுகாப்பான முறையில் கழிவுநீர் அகற்றும் பணி, குடிநீர் தரத்தை பரிசோதிப்பது ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் கிணற்று நீர், ஆழ்துளை நீர் போன்ற நீர்களின் தரத்தை ஆய்வு செய்யும் தர உறுதி பிரிவும் இயங்கி வருகிறது.

மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள குடிநீர் தரத்தை உறுதி செய்யும் வகையில் தினமும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பரிசோதனைக் கூடத்தில் குடிநீர் தரம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் தரத்தை பரிசோதிக்க தனித்தனி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் குடிநீர் மற்றும் கழிவுநீரில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றை பரிசோதிக்க முறையே 23 மற்றும் 16 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

You may also like

Leave a Comment

one × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi