சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை தொடங்கியது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் ஆறாவது நாளாக அதிமுக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்:
ஈபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக அங்கீகரித்து சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் செய்தது. உச்சநீதிமன்றம் அனுமதியளித்ததால் பொதுக்குழுவில் அதிகாரத்தை சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டது.
கட்சி லெட்டர் பேடை தவறாக பயன்படுத்துகிறார் ஓபிஎஸ்:
ஓபிஎஸ் கட்சி லெட்டர்பேடை தவறாக பயன்படுத்தி கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகிறார். கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் என கூறி வருகிறார். மேல்முறையீட்டு வழக்கில் முடிவு வரும் வரை எந்த நடவடிக்கையும் வேண்டாமென தவிர்த்து வருகிறோம். கட்சி விதிப்படியே அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது.
பொதுக்குழு முடிவு உறுப்பினர்களை கட்டுப்படுத்தும்:
ஜனநாயக அடிப்படையில் அதிமுக-வில் பொதுக்குழு முடிவுகள் என்பது அனைத்து உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு என்று எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஓபிஎஸ் பின்பற்றிய நடவடிக்கைப்படியே நீக்கம்:
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாககூறி எந்த விளக்கமும் கேட்காமல் சகோதரர் ராஜாவை நீக்கினார் ஓபிஎஸ் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. அதிமுக தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஓபிஎஸ் மேற்கொண்ட நடைமுறையே தற்போது அவரது நீக்கத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதிமுக வழக்கு 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு:
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு ஜூன்15க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பு பதில் வாதத்திற்காக விசாரணையை ஜூன் 15க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.