சென்னை: உச்ச நீதிமன்ற நிபந்தனைகளின் படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று காலை நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை வேண்டும் என்றே காலம் தாழ்த்தியதால் செந்தில் பாலாஜிக்கு 58 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
பின்னர் ஒரு வழியாக உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து கடந்த 471 நாட்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி நேற்று இரவு ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது திமுக தொண்டர்கள் செந்தில் பாலாஜிக்கு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.