டெல்லி: ஜம்மு-காஷ்மீர் அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை 2019 ஆகஸ்ட் 5ம் தேதி அன்று ஒன்றிய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 20 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
முதல் முறையாக 2019 டிசம்பரில் நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் அந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு வழக்கை மாற்றுமாறு மனுதாரர்கள் முறையிட்டனர். ஆனால் 2020 மார்ச்சில் வழங்கப்பட்ட உத்தரவில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலேயே வழக்கு நடைபெறும் என என்.வி ரமணா அறிவித்தார். அதன் பிறகு என்.வி ரமணா, யு.யு லலித் ஆகியோர் அடுத்தடுத்து தலைமை நீதிபதிகளாக பதவியேற்று ஓய்வும் பெற்ற நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிட படாமலேயே இருந்தது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் இந்திய அரசியல் அமைப்பின் 370வது சட்டப்பிரிவை நீக்கிய சட்ட திருத்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது. ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளதால் காஷ்மீரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.