டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீட் தேர்வு முடிவுகளை, நகரங்கள், தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வுமுகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேட்டால் எவ்வளவு மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள் என்பதை கண்டறியும் வகையில் தேர்வு மையம் வாரியாக தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது.
கடந்த மே மாதம் 5-ம் தேதி இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாக இணையத்தில் வெளியானது. மேலும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டது. இதனை அடுத்து வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து மறுத்தேர்வு நடத்த உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நீட் வினாத்தாள் கசிந்துள்ளதாகவும், அதனால் நீட் மறுத்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீர் தேர்வு முடிவுகளை, நகரங்கள், தேர்வு மையம் வாரியாக வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீட் தேர்வு முடிவுகளை, நகரங்கள், தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வுமுகமை வெளியிட்டுள்ளது.