பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களுக்குமான குபேரன் மீன ஆசனத்தில் வீற்றிருக்குமாறு, கல் தூண்களின் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் அரிய நிகழ்வாக ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் 19, 20, 21 ம் தேதிகளில் காலை 6.20 மணி முதல் 6.30 மணி வரை மூலவர் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் காலை 6.35 மணி முதல் 6.45 மணி வரை மூலவர் காமாட்சி அம்பாள் மீது சூரிய ஒளிக்கதிர் விழுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டின் பங்குனி மாத 19-ம் தேதியான இன்று காலை மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதனை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. நாளை காலையும், நாளை மறுநாள் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும் அரிய நிகழ்வு நடைபெறும்.