அங்கன்வாடிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சன் டிவி 2 கோடியே 9 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இலவச சிகிச்சை, கல்வி, இளைஞர் நலன், சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அங்கன்வாடிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சன் டிவி 2 கோடியே 9 லட்சத்து 40 ஆயிரத்து 970 ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
இதற்கான காசோலையை, க்ரை தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பூஜா மர்வாஹா, நிர்வாகிகள் யாமினி கபூர், ஹரி ஜெயகரன், ஜான் ராபர்ட்ஸ், யாசின் ஆகியோரிடம் சன் டி.வி. சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். ஆரோக்கியமான தொடக்கம் என்ற திட்டத்தின் கீழ் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 50 அங்கன்வாடி மையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இதன் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைவார்கள். சன் டிவி மற்றும் சன் பவுண்டேஷன் இதுவரை அளித்த நிதி உதவியின் மூலம் க்ரை தொண்டு நிறுவனம் செயல்படுத்திய திட்டங்களால் சுமார் இரண்டரை லட்சம் குழந்தைகள், 2 ஆயிரத்து 200 வளரிளம் பெண்கள், ஆயிரத்து 100 பாலூட்டும் தாய்மார்கள் பயனடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.