சென்னை : தமிழ்நாட்டில் அனல் காற்று வீசி வருவதால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் முடிந்தும் வழக்கத்திற்கு மாறாக செப்டம்பரில் அதிகபட்ச வெயில் கொளுத்தி வருகிறது. பகல் இரவு நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் பல இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். மாநிலத்தின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று திசைமாறியதே இதற்கு காரணம் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த், “தென்மேற்கு பருவ காலம் தொடங்குவதற்கு முன்பு கோடைக் காலம் நிலவும். அப்போது சூரியனின் குத்துக் கதிர்கள் தெற்கிலிருந்து வடக்கில் நோக்கி நகரும். அப்போது தமிழக நிலப்பரப்பைக் கடக்கும். இதனால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அதன்பின்னர் சூரியனின் குத்துக் கதிர்கள் மீண்டும் கீழே வரவேண்டும். வடக்கிலிருந்து தெற்காக நகர்ந்து தெந்துருவப் பகுதிக்குப் போகும். இந்த செயல் செப்டம்பர் மாதத்தில் தான் நடைபெறும். இச்சூழலில் தமிழகத்தை வெப்பம் தாக்கும். ஆனால் வறண்ட வானிலை இதனை மிகைப்படுத்தி, வெப்பத்தை 2 – 3 டிகிரி வரை அதிகரிக்கச் செய்துள்ளது. தென்மேற்கு பருவமழை விடைபெற்றால்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இது வழக்கமாகச் செப்டம்பர் 17க்குப் பின் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு ஒருவாரம் தாமதமாகத் துவங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே 25ம் தேதிக்கு பிறகே இது நடக்கும்” என்கிறார்.