மதுரை: செல்போன் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆவணத்துடன் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி யூடியூபர் வாசனுக்கு போலீசார் சம்மன் வழங்கினர். மதுரை, வண்டியூர் ரிங்ரோடு டோல்கேட்டில் மே 15ம் தேதி தனது காரை ஓட்டிச் சென்ற டிடிஎப்.வாசன், அதுதொடர்பான வீடியோவை யூடியூபில் வெளியிட்டார். இதில், அவர் செல்போன் பேசியபடி சென்றது சர்ச்சையை கிளப்பியது.
இதுதொடர்பான புகாரின்பேரில் மதுரை அண்ணாநகர் போலீசார், வாசன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் மதுரை அண்ணா நகர் போலீசில் 10 நாட்களுக்கு தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதன்படி 3வது நாளான நேற்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் டிடிஎப் வாசன் கையெழுத்திட்டார்.
அப்போது ஓட்டுநர் உரிமத்திற்கான ஆவணம் மற்றும் செல்போனுடன் ஜூன் 3 (இன்று) காவல் நிலையத்தில் ஆஜராகக் கோரி டிடிஎப்.வாசனுக்கு அண்ணாநகர் காவல் நிலையம் சார்பில், சம்மன் நேரில் வழங்கப்பட்டது. இதனிடையே, 10 ஆண்டுக்கு டிடிஎப்.வாசனின் வாகன உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பழகுநர் உரிமம் எவ்வாறு பெற்றார் என்பது குறித்தும் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
* ரவுடி வரிச்சியூர் செல்வத்துடன்…
டிடிஎப்.வாசன் சந்தித்து பேசிய வீடியோவை தற்போது வரிச்சியூர் செல்வம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மதுரையில் தங்கியுள்ள வாசன், கொலை வழக்கில் ஜாமீனில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சந்தித்தது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பாகி உள்ளது.