ஏரி முழுகொள்ளளவை எட்டும் பட்சத்தில் லால்பேட்டை அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடை, சேத்தியாத்தோப்பு அருகே உள்ள புதிய வீராணம் அணைக்கட்டு மூலமாக உபரிநீர் வெளியேற்றப்படும். இதுதவிர சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக புதிய வீராணம் திட்டம் மூலம் வீராணம் ஏரியில் இருந்து நாளொன்றிற்கு 63 முதல் 270 மி.கன அடிகள் வரை ராட்சத குழாய்கள் மூலம் உறிச்சி அனுப்பப்பட்டு வந்தது.
தற்போது தண்ணீர் வரத்து இல்லாததாலும் வெய்யிலின் தாக்கம் அதிகரித்த காரணத்தாலும் ஏரியின் நீர்மட்டம் அதிவேகமாக குறைந்து ஏரி விளையாட்டு மைதானம் போல் காட்சியளிக்கிறது. தற்போது நீர்மட்டம் 6.50 அடியாக உள்ளது.
இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. வழக்கமாக மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னைக்கு குடிநீர் நிறுத்தப்படும். ஆனால் நடப்பாண்டு ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.