ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, காட்டேரி பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களிலும் முன்னதாக மலர் நாற்றுகள் நடவு செய்யப்படும். அவை ஏப்ரல், மே மாதங்களில் பல வண்ணங்களில் பூத்து காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கோடை சீசனுக்காக தோட்டக்கலைத் துறையினர் அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாற்று நடவு பணி நடந்து வருகிறது. தற்போது பாத்திகள் மற்றும் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளை பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காவிலும் நாற்று நடவு பணிகள் துவங்கியுள்ளது. இதில், காட்டேரி பூங்காவில் மலர் செடி நடவு செய்வதற்காக பாத்திகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.