சுமித் நாகல் 68!: தரவரிசையில் முன்னேறி சாதனை

துபாய்: ஏடிபி ஆண்கள் ஒற்றையர் பிரிவு உலக தரவரிசையில், இந்திய வீரர் சுமித் நாகல் முதல் முறையாக 68வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். 2024 தொடக்கத்தில் உலக அளவில் 138வது இடத்தில் இருந்த நாகல் (26 வயது) சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் தொடரில் சாம்பியன் பட்டத்துடன் சீசனை சிறப்பாகத் தொடங்கினார். பிப்ரவரி மாதம் முதல் முறையாக டாப் 100ல் இடம் பிடித்து அசத்தினார். ஜெர்மனியில் நடந்த ஹெயில்பிரான் நெக்கர் கோப்பை ஏடிபி சேலஞ்சர் தொடரில் கோப்பையை வென்றதை அடுத்து கடந்த மாதம் ஒரேயடியாக 77வது இடத்துக்கு தாவினார். இத்தாலியில் நடந்த பெருகியா தொடரின் பைனலில் தோற்று 2வது இடம் பிடித்ததுடன், நடப்பு சீசனில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் என 3 கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் விளையாடவும் தகுதி பெற்றார். ஆஸி. ஓபனில் 31வது ரேங்க் வீரர் அலெக்சாண்டர் புப்லிக்கை நேர் செட்களில் வீழ்த்தி அதிர்ச்சி தோல்வியை பரிசளித்த நாகல், கடந்த 35 ஆண்டுகளில் ஒரு கிராண்ட் ஸ்லாம் தொடரில் ரேங்க் பெற்ற வீரரை (சீடட் ப்ளேயர்) வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையயும் தட்டிச் சென்றார்.

விம்பிள்டன் முதல் சுற்றில் வெளியேறினாலும், நேற்று முன்தினம் வெளியான ஏடிபி தரவரிசை பட்டியலில் நாகல் முதல் முறையாக 68வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்தார். முன்னதாக, 1973ல் இந்தியாவின் சஷி மேனன் 71வது இடம் பிடித்திருந்தார். ஒற்றையர் தரவரிசையில் முன்னிலை வகித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விஜய் அமிர்தராஜ் (1980ல் 18வது ரேங்க்), ரமேஷ் கிருஷ்ணன் (23வது, 1985), சோம்தேவ் தேவ்வர்மன் (62வது, 2011) ஆகியோருக்கு அடுத்து 4வது இடத்தை நாகல் பிடித்துள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்சில் பங்கேற்ற அவர், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.