திருத்தணி: முன்விரோதம் காரணமாக கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிவேல்(63). இவருக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மர்மமான முறையில் முனிவேலின் கரும்பு தோட்டம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கரும்புகள் தீயில் கருகி நாசமாகியது.
இது குறித்து முனிவேல் திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரில் அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை, பூபதி, கன்னியப்பன் ஆகியோர் 3 பேர்தான் முன்விரோதம் காரணமாக தனது கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்துள்ளனர் என கூறியிருந்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.