Sunday, July 7, 2024
Home » கரும்புத்தோகையில் இருக்கு கச்சிதமான இயற்கை உரம்!

கரும்புத்தோகையில் இருக்கு கச்சிதமான இயற்கை உரம்!

by Porselvi

என்னதான் புதிது புதிதாக பல செயற்கை உரங்கள் வந்தாலும், அவை இயற்கையாக கிடைக்கும் உரங்களுக்கு ஈடாகாது. இயற்கை உரங்களை நமக்கு கிடைக்கும் எளிமையான பொருட்களில் இருந்தே தயாரித்து விடலாம். அந்த வகையில் கரும்புத் தோகையில் இருந்து உரம் தயாரித்து பயிர்களுக்கு இட்டு நல்ல பலனைக் காணலாம். கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஹெக்டருக்கு 10-லிருந்து 12 டன் வரை உலர்ந்த இலைகள் உற்பத்தி ஆகிறது. 5வது மற்றும் 7வது மாதங்கள் கரும்புப் பயிரில் இருந்து உலர்ந்து பயனற்றுப் போகும் இலைகளை நீக்கும் பருவமாக இருக்கிறது. உலர்ந்த இலையில் 28.6 சதவீதம் கரிமச் சத்தும், 0.35லிருந்து 0.42 சதவீதம் தழைச்சத்தும், 0.04லிருந்து 0.15 சதவிகிதம் மணிச்சத்தும், 0.50லிருந்து 0.42 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளன. உலர்ந்த கரும்புத் தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மை மேம்படுகிறது. இதனால் மண்ணின் மின்கடத்தும் திறன் குறைந்து, நீரைத் தக்கவைக்கும் திறன் அதிகரிக்கிறது. மண்ணில் உள்ள நுண்துளைகளினால் மண்ணின் கட்டமைப்பு அதிகரிக்கிறது. கரும்பின் உலர்ந்த தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் அடர்த்தி குறைகிறது. மண்ணின் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது. உலர்ந்த கரும்புத் தோகைகளை மண்ணோடு நேரடியாக கலப்பதால் மண்ணின் அங்ககத் தன்மை அதிகரிக்கிறது. மண்ணில் ஊட்டசத்துக்களின் அளவும் அதிகரிக்கிறது. கரும்பின் உலர்ந்த தோகைகளை எளிதில் மக்கிய உரமாக மாற்றுவதற்கு அஸ்பர்ஜல்லஸ், பெனிசீலியம், ட்ரைக்கோடெர்மா, ட்ரைக்கரஸ் ஆகிய பூஞ்சான்களைப் பயன்படுத்தலாம்.

மக்கிய கரும்புத் தோகை உரத்தை அளித்தல்

செறிவூட்டப்பட்ட மக்கிய உரம் எக்டருக்கு 5 டன் பரிந்துரைக்கப்படுகிறது. இது வயலில் உழப்பட்டு மீண்டும் கரும்பு வயலுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. மக்கிய உரம் தயாரிப்பதற்கு குழி ஏற்படுத்திச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மண்ணின் மேற்பரப்பிலேயே மக்கிய உரம் தயாரிக்கலாம்.

உலர்ந்த கரும்புத் தோகைகளை சிறு துண்டுகளாக்குதல்

உலர்ந்த கரும்புத் தோகை நீளமான ஒன்றாகும். இதை கையாளுவதும் குவிப்பதும் கடினமானதாகும். ஆதலால் இந்த உலர்ந்த கரும்புத் தோகைகளை சிறு சிறு துண்டுகளாக்கி பின் உபயோகப்படுத்தலாம். இதனால் அதன் அளவு குறைவதுடன், வெளிப்பரப்பு அதிகரிக்கிறது. உலர்ந்த கரும்புத் தோகைகளில், அதிக இலைப்பரப்பும், நுண்ணுயிரிகளும் அதிகமாக காணப்படும். இது மக்குவதை ஊக்குவிக்கிறது. சிறு துண்டுகளாக்கும் கருவியை உபயோகித்து அனைத்துத் தோகைகளையும் துண்டுகளாக்கலாம். கரும்புகளை துண்டுகளாக்கும் கருவியும் இதற்கு பயன்படுகிறது. துண்டுகளாக்கும் கரும்புத் தோகையை துண்டுகளாக்காமல் மக்குதல் நிகழ்ச்சி துரிதமாக நடக்க வாய்ப்பில்லை.

இடுபொருட்கள் நுண்ணுயிர் கூட்டுக் கலவை

வேளாண்மை பல்கலைக்கழகம் பயோமினரலைசர் என்ற நுண்ணுயிரிகளின் கூட்டுக் கலவை மக்குவதை ஊக்குவிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. 1 டன் கரும்புத் தோகைக்கு 2 கிலோ பயோமினரலைசர் பரிந்துரைக்கப்படுகிறது. பயோமினரலைசர் இல்லாமல் மக்கிய உரத்தை மிக விரைவில் தயாரிக்க முடியாது. இது தவிர மற்றொரு இடுபொருள் சாணக் கரைசலாகும். சாணக்கரைசலில் மட்குவதற்கு உகந்த நுண்ணுயிரி குறைவாக இருப்பதால், மட்கும் காலம் அதிகம் ஆகிறது.

கால் நடைக் கழிவுகள்

கோழி எரு, கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து விகிதத்தைக் குறைப்பதற்கு ஆதாரமாக பயன்படுகிறது. ஒரு டன் கரும்புத் தோகைக்கு 50 கிலோ சாணம் பரிந்துரைக்கப்படுகிறது. இதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து பின்பு கரும்புத் தோகையோடு கலக்க வேண்டும். ராக்பாஸ்பேட் 5 கிலோவை ஒரு டன் கழிவுக்கு சேர்ப்பதால், மணிச்சத்தின் அளவு உயர்த்தப்படுகிறது.

குவியல் உருவாக்குதல்

அனைத்து இடுபொருட்களை இட்ட பின்பு, கழிவுகளினால் குவியல் உருவாக்க வேண்டும். இது 4 அடி உயரத்திற்கு இருந்தால் நல்லது. ஏனெனில் குவியலுக்குள் வெப்பம் உருவாக்கப்பட்டு, அது நிலை
நிறுத்தப்பட இந்த உயரம் அவசியம்.

கழிவுகளைக் கிளறிவிடுதல்

கழிவுகளை 15 நாட்களுக்கு ஒருமுறை கிளறி விட வேண்டும். குவியலுக்குள் காற்றோட்டம் இருந்தால் மட்டுமே நன்றாக மக்கும். அது மட்டுமில்லாமல் கீழிருக்கும் கழிவுகள் மேலும், மேலிருக்கும் கழிவுகள் கீழும் திருப்பி விடப்படுகிறது. இதனால் கழிவுகள் முழுவதும் ஒரே சீராக மக்குகிறது.

ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துதல்

மக்கும் உரம் தயாரிக்கும் முறையில் கழிவுகளில் 60 சதவீதம் ஈரப்பதம் தேவைப்படுகிறது. ஈரப்பதம் குறைந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் அனைத்தும் இறந்துவிடும் அபாயநிலை ஏற்படுகிறது. ஈரப்பதம், மக்குவதற்கு ஒரு முக்கிய காரணியாகும்.

மக்குதல் முதிர்வடையும் நிலை

அளவு குறைதல், மண் வாசனை, பழுப்பு கலந்த கருமை நிறம், இலைகள் மக்குதல் முதிர்வைக் கண்டறிய உதவுகிறது. இந்த நிலையை அடைந்த பிறகு மக்கிய உரத்தைப் பிரித்து உலர விட வேண்டும். 24 மணி நேரத்திற்குப் பிறகு மக்கிய உரத்தைச் சலிக்க வேண்டும். சலித்த பின்பு கிடைக்கும் கழிவுகளை மறுபடியும் மக்கச் செய்யலாம்.

செறிவூட்டுதல்

மக்கிய உரத்துடன், நுண்ணுயிரிகளான அசிட்டோபாக்டர் அஸோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் ஆகியவற்றைக் கலப்பதால் அவை மேலும் ஊட்டமேற்றப்படுகிறது. இருபது நாட்களில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.

 

You may also like

Leave a Comment

fourteen + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi