சென்னை: தண்டையார்பேட்டை தாண்டவராயன் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ் (22). இவர், நேற்று புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதிக்கு செல்ல, தனது தந்தையின் காரை எடுத்துக்கொண்டு தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெரு வழியாக சென்றுள்ளார். அப்போது, திடீரென கார் இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் காரை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கி யோகராஜ், ஓட்டம் பிடித்தார்.
இதுகுறித்து தண்டையார்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த மற்ற கார்களுக்கு தீ பரவாமல் இருக்க தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டனர். ஆனாலும் அருகில் இருந்த ஒரு காரில் லேசாக தீ பற்றியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.