கோவை டிஎஸ்பி திடீர் மரணம்: சர்வ மத குருமார்களை அழைத்து திருமணம் செய்தவர்


சூலூர்: கோவை பேரூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேற்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (56). இவர், கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 10 ஆண்டாக சூலூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் வெற்றிச்செல்வனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் வெற்றிச்செல்வனை சூலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஒரு மாதமாக வெற்றிச்செல்வன் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கடந்த 3 நாட்களுக்கு முன் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சையில் இருந்த வெற்றிச்செல்வன் நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிச்செல்வனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது மகளுக்கு சர்வ மத குருமார்களை அழைத்து திருமணம் செய்து வைத்தார். அந்த நிகழ்ச்சி அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. சூலூரில் உள்ள வீட்டில் வெற்றிசெல்வன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், நேற்று மாலை 4 மணியளவில் சூலூரில் உள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Related posts

மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சவுமியா அன்புமணி வரவேற்பு

ரவுடிகளுக்கும் பாஜவுக்கும் உள்ள தொடர்பை குறித்து விளக்குவாரா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி

சுற்றுலா வேன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இரண்டு பேர் கைது