கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீர் மாற்றம்

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முருகன், சேலம் மாவட்டத்திற்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் அருகே விபத்தில் உயிரிழந்த நிலையில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீலகிரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி முருகன் விசாரித்து வந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்ட பின்னர் வழக்கு விசாரணை பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி. போலீசார் நீலகிரி மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா உட்பட காவல்துறை அதிகாரிகளிடமும், கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்ட முக்கிய நபர்களை விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பணியாற்றும் 26 நீதிபதிகள் நேற்று பணியிட மாற்றம் செய்து வெளியான பட்டியலில் நீதிபதி முருகன் பெயரும் இடம்பெற்றுள்ளது. நீதிபதி முருகனுக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல்காதர் புதிய நீதிபதியாக நியமனம் செய்யபட்டுள்ளார்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை