Monday, July 1, 2024
Home » புறநகர் ரயில் சேவை குறைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

புறநகர் ரயில் சேவை குறைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

by Francis

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில், மூர்மார்க்கெட் – அரக்கோணம், மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி – சூலூர்பேட்டை ஆகிய 4 வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மின்சார ரயில்களின் சேவை நேரத்தை மாற்றி கால அட்டவணை வெளியிடுகிறது. அதன்படி, 4 வழித்தடங்களிலும் சேவைகள் சற்று குறைக்கப்பட்டு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கை 124ஆக இருந்த நிலையில் தற்போது 8 சேவை குறைக்கப்பட்டு 116 சேவை நேற்று முதல் செயல்பட்டிற்கு வந்தது. கடற்கரை நிலையத்தில் அதிகாலை 3.55 மணி முதல் சேவை தொடங்குகிறது. இந்த ரயில் தாம்பரத்திற்கு அதிகாலை 4.50 மணிக்கு செல்கிறது. இரவு 11.59 மணிக்கு கடைசி சேவையாக புறப்படும் மின்சார ரயில் தாம்பரத்திற்கு நள்ளிரவு 12.54 மணிக்கு செல்கிறது. இதே போல செங்கல்பட்டில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் கடற்கரைக்கு நள்ளிரவு 12.54 மணிக்கு வந்து சேருகிறது. கடற்கரை நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவையும் 9 குறைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 70 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் 61 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. முன்பு இந்த சேவை 80 ஆக இருந்தது. கடந்த ஆண்டு 70 ஆக குறைக்கப்பட்டது. அதிகாலை 4.10 மணிக்கு கடற்கரை நிலையத்தில் இருந்து முதல் சேவை தொடங்குகிறது. 4.55 மணிக்கு வேளச்சேரி சென்றடைகிறது.

வேளச்சேரியில் இருந்து அதிகாலை 5.05 மணிக்கு புறப்படும் ரயில் 5.50 மணிக்கு கடற்கரை வந்து சேரும். இரவு 10.20 மணிக்கு கடைசி சேவையாக கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரயில் வேளச்சேரிக்கு இரவு 11.05 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து இரவு 11.10 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.35 மணிக்கு கடற்கரை நிலையம் வந்து சேரும். காலை மற்றும் மாலை பீக் அவர்ஸ் நேரத்தில் 10 நிமிடத்திற்கு வீதம் ஒரு பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. சாதாரண நேரத்தில் 20 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை உள்ளது. மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் 128 மின்சார ரயில்கள் இக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 124 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மூர்மார்க்கெட்டில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு முதல் சேவை ஆவடிக்கு தொடங்குகிறது. இந்த ரயில் நள்ளிரவு 1.05 மணிக்கு ஆவடியை சென்றடைகிறது. அதே போல பட்டாபிராமில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் ரயில் மூர் மார்க்கெட்டுக்கு அதிகாலை 4.25 மணிக்கு வந்து சேரும்.

இரவு 11.45 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் ரயில் ஆவடிக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு செல்லும். இதுவே கடைசி சேவையாகும். இதே போல திருத்தணியில் இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12.20 மணிக்கு மூர் மார்க்கெட் வந்து சேரும். கடற்கரையில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு புறப்படும் முதல் ரயில் காலை 6.25 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும். கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரயில் மூர் மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.20 மணிக்கு வந்து சேரும். இரவு 11.20 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் ரயில் நள்ளிரவு 1 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும். இரவு 9.40 மணிக்கு சூலூர்பேட்டையில் இருந்து புறப்படும் ரயில் மூர்மார்க் கெட்டுக்கு 11.45 மணிக்கு வந்து சேரும். கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 47 சேவைகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய அட்டவணைப்படி மொத்தம் 620 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 

You may also like

Leave a Comment

eighteen − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi