பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், நந்தியம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய ராஜிவ்காந்தி நகரில் அடிக்கடி மின்விசிறி, டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன. மேலும், இதுகுறித்து பலமுறை மின் ஊழியர்களுக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று நந்தியம்பாக்கம் வார்டு உறுப்பினர் காதர் பாட்ஷா தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் மேலூரில் அமைந்துள்ள துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது உதவி பொறியாளர் சுரேஷிடம் இதுகுறித்து புகார் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து, பொதுமக்களுடன் கலந்து பேசிய அதிகாரிகள் இன்னும் 2 நாட்களுக்குள் புதிய மின்மாற்றி அமைத்து பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.