மதுரை: நியோமேக்ஸ் நிறுவனத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்த கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன. இதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து நிர்வாக இயக்குநர்களான மதுரை கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகர் திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்து, 35க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சிவகங்கையைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரை, தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். இவர் நியோமேக்ஸ் துணை நிறுவனமான டிரைடஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநராக இருந்து, ரூ.8 கோடி வரை முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு மகாலிங்கம் காரணமாக இருந்தது தெரிய வந்துள்ளது.