சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பை பூர்வீகமாகக் கொண்டவர் டாக்டர் சுப்பையா. இவர் கடந்த 2013ல் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி,” 7 பேருக்கு தூக்கு தண்டனை, இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2021 ஆகஸ்ட் 21ம் தேதி தீர்ப்பளித்திருந்தார். 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்ரூவரான அய்யப்பனுக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை.
இந்த தீர்ப்புக்கு எதிராக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் 9 பேரையும் விடுதலை செய்து கடந்த ஜூன் 14ம் தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்” இந்த விவகாரத்தில் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் தான் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், ஏழு பேருக்கு தூக்கு தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது.
அதேபோன்று கொலை குற்றத்திற்கான போதிய ஆதாரங்கள் உள்ளது. ஆனால் இவை அனைத்தையும் உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல், ஒன்பது பேரையும் எந்த முகாந்திரமும் இல்லாமல் விடுதலை செய்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, அதற்கு தடை விதிக்க வேண்டும். சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.