ஆவடி: திருநின்றவூரில் பிரசித்தி பெற்ற ஜெயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாணவர்களிடம் திறன் வளர்க்கும் திட்டம் துவங்கப்பட்டது. இதில் ஜெயா கல்வி குழுமத் தலைவர் அ.கனகராஜ் பங்கேற்று துவக்கி வைத்தார். ஆவடி அருகே திருநின்றவூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் பேசும் திறன், கற்றல், எழுதுதல், படித்தல், கற்பனை திறனை வளர்த்தல், கற்பனை ஓவியங்கள் வரைதல், அறிவுத்திறன் மேம்பட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி, இயந்திர மனிதனின் செயல்பாடுகளை உணர்தல் உள்பட பல்வேறு திறன் வளர்க்கும் திட்டங்களின் துவக்க விழா நேற்று மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயா கல்வி குழுமத் தலைவர் அ.கனகராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பள்ளி மாணவர்களின் பல்வேறு திறன் வளர்க்கும் திட்டங்களை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். இதில் மிராஸ் அகாடமி தலைவர் டாக்டர் மனிஷ் ஜா, டாக்டர் சுதா தேவராஜ் இயக்குனர் கருணாகரன், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.