பந்தலூர்: பந்தலூரில் அரசு பஸ்களில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்களால் அச்சம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர், கூடலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் விதமாக அரசு போக்குவரத்து கழகம் கூடலூர் கிளை சார்பில் போதிய பேருந்துகள் இயக்கப்படாவில்லை. இதனால் பல்வேறு வழித்தடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களில் பயணிகளுடன் முண்டியடித்துக்கொண்டு ஏறி மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.
சில நேரங்களில் பஸ்களில் அளவுக்கு அதிகமாக பயணிகள் பயணிப்பதால் மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் நின்றவாறு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மலை பகுதி என்பதால் பஸ் வளைந்து நெளிந்து செல்வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாணவர்கள் பயணம் செய்வதற்கு காலை மாலை நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.