புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரி டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சகம் அருகே மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நடந்து முடிந்த நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அரியானாவில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றிருப்பதும் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீட் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சகம் அருகே இடதுசாரி மாணவர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் அவிஜித் கோஸ் கூறுகையில், ‘‘நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நுழைவுத் தேர்வுகளின் நேர்மையை உறுதி செய்ய நம்பகமான மற்றும் பாதுகாப்பான தேர்வு முறையை நிறுவுமாறு அமைச்சகத்தை வலியுறுத்துகிறோம்’’ என்றார்.