பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டி ஜெயந்தி காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அஸ்வின்(19), யுவராஜா(19). இருவரும் நேற்று வடுகபட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். வடுகபட்டி வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரத்தில் இருந்த தடுப்பு கற்களை உடைத்துக் கொண்டு கழிவுநீர் கால்வாயில் கவிழ்ந்தது.
தலையில் பலத்த காயமடைந்த இருவரும் கழிவுநீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கால்வாயில் இறங்கி மாணவர்களின் உடலை மீட்டனர். தென்கரை போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.