புதுடெல்லி: ஒன்றியப் பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள், என்ஐடிகள் மற்றும் ஐஐஎஸ்இஆர்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 98 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் அளித்த பதிலில்,’2023ல் இதுவரை உயர்கல்வி நிறுவனங்களில் 20 மாணவர் தற்கொலை வழக்குகள் ஏற்கனவே பதிவாகியுள்ளன.
இதில் மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து ஒன்பது வழக்குகளும், ஐஐடியில் இருந்து ஏழு வழக்குகளும் அடங்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவாகும் தற்கொலை வழக்குகளில் பெரும்பாலானவை பொறியியல் நிறுவனங்களில் இருந்து வந்தவை. தற்கொலை செய்த 98 மாணவர்களில், அதிகபட்ச வழக்குகள் ஐஐடிகளில் (39), அதைத் தொடர்ந்து என்ஐடிகள் (25), மத்திய பல்கலைக்கழகங்கள் (25), ஐஐஎம்கள் (4), ஐஐஎஸ்இஆர்கள் (3) மற்றும் ஐஐஐடிகள் (2) இடம் பெற்றுள்ளன’ என்று தெரிவித்தார்.