Tuesday, July 2, 2024
Home » மாணவர்கள் புத்தக வாசிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்

மாணவர்கள் புத்தக வாசிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்

by Lakshmipathi

*புத்தக திருவிழாவில் வேண்டுகோள்

ஊட்டி : மாணவர்கள் புத்தக வாசிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என ஊட்டியில் நடந்த புத்தக திருவிழாவில் வலியுறுத்தப்பட்டது. ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி புத்தக திருவிழா நேற்று துவங்கியது. விழாவில், மாவட்ட வருவாய் அலுலவலர் கிர்த்தி பிரியதர்ஷினி வரவேற்றார். ஊட்டி எம்எல்ஏ., கணேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது: புத்தம் எழுதுவது சாதாரண விஷயம் அல்ல. முறையாக எழுத வேண்டும் என்றால், அதற்கு பல புத்தகங்களை அவர்கள் படித்திருக்க வேண்டும். மாணவர்கள், இதனை பின்பற்ற வேண்டும். எனவே, மாணவர்கள், அதிக புத்தகங்களை படிக்க வேண்டும். ஒரு புத்தகத்தை படிக்கும் போது, அதனை எழுதியது யார், என்ன கருத்துக்கள் கூறியுள்ளார் என்பதை கவனமாக படித்து அறிந்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் குறைந்த விலையில் பல்வேறு புத்தகங்கள் கிடைக்கிறது.அதனை வாங்கி படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். திருவாசகம் மற்றும் சித்தர் பாடல்களை படிக்கலாம். சமத்துவ மற்றும் சகோதோரத்துவத்தை உணர்த்தும் புத்தகங்களை படிக்க வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதனை அடைய கடினமாக உழையுங்கள்.

தோல்வியை கண்டு பயப்படாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், வெற்றியடையலாம். புத்தகத்தோடு பயணிப்பவர்களுக்கு புத்தகம் நல்ல வழியை காட்டும். எனவே, புத்தக வாசிப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். இது போன்ற புத்தக கண்காட்சி சென்னை போன்ற முக்கிய நகரங்களிலேயே இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு இந்த புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை கல்வி தான் நம்மை தூக்கி நிறுத்தியுள்ளது. எனவே, மாணவர்கள் அதிக புத்தகங்களை வாசியுங்கள். உங்கள் உயர்விற்கு பெரும் உதவியாக இருக்கும், என்றார். இவ்விழாவில், கவிஞர் சீனு ராமசாமி உட்பட எழுத்தாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

You may also like

Leave a Comment

20 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi