*காத்திருந்து வீடு திரும்பினர்
கோத்தகிரி : கோத்தகிரி நடுஹட்டி பள்ளிக்கு ஆசிரியை வராததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகா கட்டபெட்டு அருகிலுள்ள நடுஹட்டி அரசு ஆரம்பப்பள்ளி கடந்த ஆண்டு நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், எம்பி ராசா ஆகியோரால் தொடங்கப்பட்டது.
5ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளி சமுதாய கூடத்தில் இயங்கி வருகிறது. இதில் நடுஹட்டி கிராமத்தை சேர்ந்த 9 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரே ஒரு பெண் ஆசிரியை பாடம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறந்த நிலையில் பள்ளிக்கு மாணவர்கள் ஆர்வமுடன் வந்தனர். ஆனால், அந்த ஆசிரியை வரவில்லை.
இதன் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதன் பிறகு வேறு ஒரு ஆசிரியயை நியமித்து இன்று முதல் பள்ளிக்கு வர உத்தரவிட்டனர்.