கர்ப்பமடைந்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை முயற்சி


சேலம்: சேலம் அருகே கர்ப்படைந்த பிளஸ்-2 மாணவி, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல், தனக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கிறது எனக்கூறியபடி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், தான் 2 மாத கர்ப்பமாக இருப்பதை மாணவி அறிந்து கொண்டுள்ளார். உடனே வீட்டில் இருந்து வெளியே செல்வது போல் சென்றிருக்கிறார். உடனே அவரது பெற்றோர், மாணவியை தேடினர். ஆனால் மாணவி, வீட்டிற்குள் சென்று சேலையால் தூக்கிட்டுக் கொண்டார். இதனை ஜன்னல் வழியே பார்த்த உறவினர்கள், வேகமாக வீட்டிற்குள் சென்று, மாணவியை மீட்டனர்.

பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மாணவியை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார், மருத்துவமனைக்கு சென்று மாணவியை பார்த்தனர். பின்னர், போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிகிச்சையில் இருக்கும் மாணவியால் பேச முடியாத நிலை இருப்பதால், அவரது கர்ப்பத்திற்கு காரணம் யார் என அறிய முடியவில்லை. அதனால், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்படைய செய்தது யார்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

கார்- பைக் மோதியதில் பாட்டி, கணவன் பலி: கர்ப்பிணி மனைவி கிணற்றில் குதித்தார்

50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

பதிவுத் துறையில் 15 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்