பாரீஸ்: கடனில் தத்தளிக்கும் ஜாம்பியாவுக்கு சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரூ.51 ஆயிரம் கோடி கடன் வழங்க முடிவெடுத்துள்ளன. ஆப்ரிக்க நாடான ஜாம்பியா 2020ம் ஆண்டு நவம்பரில் தனது ரூ.368 கோடி கடனை திருப்பி செலுத்த தவறியதால் கடும் நிதி பிரச்னை ஏற்பட்டது. இந்த பிரச்னையால் புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாமல் அந்த நாடு திணறியது. ஜாம்பியாவுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் உலக வங்கியும் நிதி உதவி அளித்துள்ளன. எனினும் சிக்கலில் இருந்து மீளமுடியவில்லை. இந்நிலையில் ஜாம்பியாவின் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க பாரீசில் சர்வதேச நிதி மாநாடு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்தமாநாட்டில் அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளை சேர்ந்த தலைவர்கள், நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்,ஜாம்பியாவின் கடன் மறுசீரமைப்புக்கு ரூ.51 ஆயிரம் கோடி கடன் வழங்குவதற்கு பிரான்ஸ்,இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. இதில் சீனா மட்டும் ரூ.32 ஆயிரம் கோடி கடன் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.